Published : 14 Feb 2018 11:38 AM
Last Updated : 14 Feb 2018 11:38 AM

என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவருக்கு திருநங்கை உருக்கமான கடிதம்

தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் பணி வழங்க மறுத்ததால் தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி அவர் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி. குடும்பத்தின முதல் பட்டதாரி. அதுவும் பொறியியல் பட்டதாரி. மாடலிங், நடிப்பு என பல திறமைகளையும் கொண்டவராக இருக்கிறார். ஆனால், இவை ஏதும் அவர் விண்ணப்பித்த வேலைக்கு தகுதி சேர்க்கவில்லை. திருநங்கை என்பதால் அவரை பணிக்கு சேர்க்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துவிட்டது. தங்கள் பணிநியமனக் கொள்கையில் மூன்றாம் பாலினத்தவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள இடமில்லை எனக் கூறி அவருக்கு பணி வழங்க மறுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஷானவி பொன்னுசாமி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். பாலின பேதத்தால் ஏர் இந்தியா தனக்கு பணி வழங்க மறுப்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸுக்கும் இதுவரை எந்தவித விளக்கமும் இருதரப்பிலிருந்துமே அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஷானவி பொன்னுசாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "பாலின பேதத்தால் எனக்கு ஏர் இந்தியா நிறுவனம் பணி அளிக்க மறுக்கிறது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த என்னால், ஏர் இந்தியா நிறுவனத்தையோ அல்லது விமான போக்குவரத்து அமைச்சகத்தையோ பேச வைக்கமுடியவில்லை. அதனால், இந்திய அரசின் கைகளாலேயே உயிர் துறப்பதை பெருமிதமாகக் கருதுகிறேன். என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள். எனது அன்றாட உணவு செலவவுக்கே என்னிடம் பணம் இல்லை. அப்படியிருக்க, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எப்படி வழக்காடுவதற்கு கட்டணம் கொடுக்க முடியும். என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள்" என உருக்கமாக வேண்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x