Last Updated : 20 Feb, 2018 01:13 PM

 

Published : 20 Feb 2018 01:13 PM
Last Updated : 20 Feb 2018 01:13 PM

போலீஸ் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொலை குற்றவாளியை மீட்டுச் சென்ற கூட்டாளிகள்: டெல்லியில் நடந்த சினிமாவை மிஞ்சும் சம்பவம்

டெல்லியில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, போலீஸார் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தி அந்த நபரை கூட்டாளிகள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

ஹரியாணா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். கிழக்கு டெல்லியில் ஒருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் அவரது குற்றத்தை நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, மண்டாவாலி சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்ப்டடு இருந்த சந்தீப், திடீரென நெஞ்சு வலிப்பதாக சந்தீப் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக மவுலானா ஆஸாத் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டெல்லி ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்புடன் சந்தீப்பை அழைத்து வந்தனர்.

மருத்துவப் பரிசோதனை முடிந்து சந்தீப்பை மீண்டும் அழைத்துக் கொண்டு போலீஸார் வெளியே வந்தனர். அவர் வாகனத்தில் ஏற முற்பட்டபோது, அங்கு மறைந்து இருந்த சந்தீப்பின் கூட்டாளிகள் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை போலீஸார் கண்ணில் வீசி ஏறிந்தனர்.

இதையடுத்து துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, போலீஸார் அலறி துடித்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு சந்தீப்பை தங்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவரது கூட்டாளிகள் வேகமாகச் சென்றனர்.

சுதாரித்த போலீஸார், சந்தீப் சென்ற வாகனம் மீது துப்பாக்கியால் நான்குமுறை சுட்டனர். எனினும் அந்த வாகனத்தின் மீது குண்டு படவில்லை. அந்த வாகனம் வேகமாக சென்று விட்டது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து வெறுங்கையுடன் போலீஸார் காவல் நிலையம் திரும்பினர். பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி, சந்தீப்பை மருத்துவமனை அழைத்துச் சென்ற போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x