Published : 09 Feb 2018 01:20 PM
Last Updated : 09 Feb 2018 01:20 PM

மார்ச் 11-ல் மூன்று மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் 2 மக்களவை தொகுதிகளுக்கும் பிஹாரில் ஒரு மக்களவை தொகுதிக்கும் வரும் மார்ச் 11-ல் இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளுக்கும் பிஹாரின் அராரியா மக்களவை தொகுதிக்கும் வரும் மார்ச் 11-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதேபோல், பிஹாரின் பபுவா மற்றும் ஜெகனாபாத் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்ரவரி 21-ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. பிப்ரவரி 23 வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 14-ல் எண்ணப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளின் எம்.பி.க்களான யோகி ஆதித்யநாத்தும், கேசவ் பிரசாத் மவுரியாவும் தத்தம் பதவியை ராஜினாமா செய்தனர். முதல்வர், துணை முதல்வர் பதவியை ஏற்கும்வகையில் அவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

பிஹாரின் அராரியா மக்களவை உறுப்பினர் முகமது தஸ்லிமுதீன் மறைவுக்குப் பின் அத்தொகுதி காலியாக இருந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

2 சட்டப்பேரவை தொகுதிகள்:

பிஹாரின் பபுவா சட்டப்பேரவை உறுப்பினர் பூஷன் பாண்டே, ஜெகனாபாத் சட்டப்பேரவை உறுப்பினர் முந்த்ரிகா சிங் யாதவ் ஆகியோரது மறைவை அடுத்து அந்த இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x