Published : 06 Mar 2024 11:12 AM
Last Updated : 06 Mar 2024 11:12 AM

ஏ.ஐ. தொழில்நுட்ப ஜாலம்: மோடியின் உரை 7 மொழிகளில் வெளியீடு

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 7 மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பாஷினி என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் உரை செயற்கை நுண்ணறிவு மூலம் நேரலையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

தற்போது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். அண்மையில் அவர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசினார்.

இந்த மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இதன்படி 7 மொழிகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் வீடியோக்கள் அவரது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசினார். அவரது உரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ, பிரதமர் மோடி நேரடியாக தமிழில் பேசுவது போன்று தத்ரூபமாக இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி வங்கமொழி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடியா, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரதமர் மோடி பேசும் வீடியோக்கள் அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு உள்ளன. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x