Published : 16 Feb 2018 01:16 PM
Last Updated : 16 Feb 2018 01:16 PM
வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ளது. நிரவ் மோடி மற்றும் அவரது பங்குதாரர் மெஹல் சோஸ்கி ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மோசடிகள் நடந்ததது சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் மோசடியாக பண பரிமாற்றம் செய்தது தொடர்பாக வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.
மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள நிரவ் மோடி கடந்த மாதமே தனது குடும்பத்துடன் சுவிட்சர்லாந்திற்கு சென்றுவிட்டார். அவரது மனைவி அமியும், நிரவ் மோடியின் தொழில் பங்குதாரரும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான மெஹல் சோஸ்கியும் வெளிநாடு சென்றுள்ளனர். இவர்களில் நிரவ் மோடியின் மனைவி அமி, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். நிரவ் மோடியின் சகோதரர் நிஷால் பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றவர்.
அவர்களை கண்காணிக்கப்படும் நபர்களாக சிபிஐ ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, நிரவ் மோடி உள்ளிட்டவர்களை கண்டுபிடிக்க இண்டர்போலின் உதவியை நாடியுள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள், ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாரில் நிரவ் மோடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸாரிடம் தகவல்களை பெற்று வருகிறோம். மோசடி நடந்ததற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அவர் தற்போது எங்கிருகிறார் என்பதை உறுதி படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இண்டர்போல் உதவியை நாடியுள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளில் அவர் தங்கியிருந்தால், அவரை கண்டுபிடித்து அழைத்து வர முடியும்’’ எனக்கூறினர்.
இதனிடையே பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோசடி புகாரில் மெஹல் சோஸ்கி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT