பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் அநீதி: ஆந்திராவில் தொடங்கியது பந்த்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் அநீதி: ஆந்திராவில் தொடங்கியது பந்த்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated on
1 min read

பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்ததாக, மத்திய அரசை கண்டித்து  இன்று (வியாழக்கிழமை) இடதுசாரிக் கட்சியினர் பந்த் நடத்திவருகின்றனர். இதனால், போக்குவரத்து முடங்கியது; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பந்துக்கு காங்கிரஸ், ஜனசேனா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளதால் பஸ், லாரி, ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆந்திர அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய அரசு தாக்கல் செய்த 2018-19 வருவாய் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்துக்கு அநீதி இழைக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு இன்று ஆந்திர மாநில பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஆந்திர மாநில தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

மேலும், போலாவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கான நிதி, கடப்பா இரும்பு தொழிற்சாலைக்கான நிதி, மாநில பிரிவினை மசோதாவில் உறுதியளித்தபடி சிறப்பு நிதிகள் யாவும் அறிவிக்கப்படவில்லை.

இதனைக் கண்டித்தே இன்று பந்த் நடைபெற்றுவருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in