ஆகாஷுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு - மாயாவதிக்கு மத்திய அரசின் பரிசு?

ஆகாஷுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு - மாயாவதிக்கு மத்திய அரசின் பரிசு?
Updated on
1 min read

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 4 முறை முதல்வராக இருந்தவர் பிஎஸ்பி தலைவர் மாயாவதி. இவர் தனது சகோதரர் அனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்தை (28) கட்சியின் வாரிசாக அறிவித்துள்ளார்.

இச்சூழலில் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது உ.பி. அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏனெனில், குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் மாநிலங்களவை தேர்தல் வரை பிஎஸ்பி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கே வாக்களித்தனர். இதனால் பாஜகவுடன் பிஎஸ்பி ரகசியக் கூட்டணி வைத்துள்ளதாக உ.பி.யில் பேசப்படுகிறது.

2014-ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் பல்வேறு தலைவர்களுக்கு மத்தியப் படை பாதுகாப்பை வாபஸ் பெற்றுள்ளது. தற்போது மிகவும் முக்கியமான தலைவர்களுக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆகாஷ் ஆனந்துக்கு ‘ஒய்’ பிரிவின் கீழ் அதிகபட்சம் 2 கமாண்டோக்களுடன் 11 காவலர்களின் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற மத்திய பாதுகாப்பு உ.பி.யில் அரசியல் அந்தஸ்தாகக் கருதப்படுகிறது. எனவே மக்களவைத் தேர்தலுக்கு முன் மத்திய அரசின் பரிசாக இது கருதப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in