Published : 24 Feb 2018 07:31 AM
Last Updated : 24 Feb 2018 07:31 AM
தமிழ், தெலுங்கு, இந்தியில் ரூ.500 கோடியில் ‘ராமாயணம்’ திரைப்படம் தயாராகிறது. இந்த திரைப்படம் தொடர்பாக உத்தர பிரதேச அரசுடன் தயாரிப்பாளர்கள் நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே ராமாயண இதிகாசம் பக்தி தொடராக ஒளிபரப்பாகி உள்ளது. தற்போது அல்லு அரவிந்த், நமித் மல்ஹோத்ரா, மது மந்தீனா ஆகிய 3 தயாரிப்பாளர்கள் இணைந்து ரூ.500 கோடி செலவில் ராமாயணத்தை பிரமாண்ட திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த திரைப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் மூன்று பாகங்களாக திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராமாயணம் திரைப்படத்தை தயாரிப்பது தொடர்பாக உத்தரபிரதேச அரசுடன் தயாரிப்பாளர்கள் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். உத்தர பிரதேச முதன்மைச் செயலாளர் அவினாஷ் குமாரும் தயாரிப்பாளர் மது மந்தீனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து முதன்மைச் செயலாளர் அவினாஷ் குமார் கூறியபோது, “உத்தரபிரதேசத்தில் ராமாயணம் படப்பிடிப்பை நடத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று தெரிவித்தார்.
ராமாயணம் திரைப்படத்துக்காக இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தயாரிப்பாளர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT