Published : 03 Feb 2018 10:25 AM
Last Updated : 03 Feb 2018 10:25 AM

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உறுதிமொழி ஏற்ற ஐபிஎஸ் அதிகாரி: வைரலாகும் வீடியோ

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, உத்தரப் பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பலர் முன்னிலையில் உறுதி ஏற்றுக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஊர்க்காவல் படையில் டைரக்டர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சூரியகுமார் சுக்லா. சமீபத்தில் நடந்த ராமர் கோயில் தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ராம பக்தர்களாகிய நாம், அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டுவதற்கு உறுதி ஏற்போம். ஜெய் ஸ்ரீராம்"என்று பேசினார். இந்து அமைப்புகளின் தலைவர்கள், ராமர்கோயில் கட்டுவதற்காக போராடி வருபவர்களுடன் அவரும் சேர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்கு உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் அனைவரும் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டனர். இந்தக் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

 

இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி வரும் நிலையில், சூரியகுமார் சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.

"நான் எந்த தவறும் செய்யவில்லை. ராமர் கோயில் கட்டுவதற்கும் அங்கிருந்து குறிப்பிட்ட தொலைவில் மசூதியும் கட்ட இருதரப்பும் பேச்சு நடத்தினால் பிரச்சினை தீரும் என்று நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. நல்லிணக்க சூழ்நிலையை ஏற்படுத்துவதற்குத்தான் உறுதி ஏற்றுக் கொண்டேன். நிகழ்ச்சியில் நான் பேசியது திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன" என்றார்.

ஆனால் அரசுப் பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர் இவ்வாறு உறுதிமொழி ஏற்றுக் கொண்டது குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x