Published : 24 Feb 2024 12:49 PM
Last Updated : 24 Feb 2024 12:49 PM

டெல்லி, குஜராத் உட்பட 5 மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த ஆம் ஆத்மி - காங்கிரஸ்

அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ள நிலையில் மொத்தமுள்ள தொகுதிகளை 4க்கு 3 என்ற வீதத்தில் பிரித்துக் கொள்ள இரண்டு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளது.

மேலும் குஜராத், ஹரியாணா, கோவா மற்றும் சண்டிகரிலும் இரு கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தெற்கு டெல்லி, மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி மற்றும் புது டெல்லி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள சாந்தினி சவுக், வடமேற்கு டெல்லி மற்றும் வடகிழக்கு டெல்லி ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லியின் மொத்த மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது.

குஜராத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி பரூச், பாவ்நகர் என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஹரியாணாவில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. குருஷேத்ரா தொகுதியை ஆம் ஆத்மி எடுத்துக் கொண்டுள்ளது. கோவா மற்றும் சண்டிகரில் உள்ள ஒரு மக்களவை தொகுதியை காங்கிரஸுக்கு வழங்கியுள்ளது. கோவாவுக்கு ஆம் ஆத்மி ஏற்கேனவே வேட்பாளரை அறிவித்திருந்தது. அந்த வேட்பாளர் திரும்பப் பெறப்படுவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்தை நடந்து வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இண்டியா கூட்டணிக்கு இது வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு முதல் வெற்றி கிட்டியது. இப்போது 5 மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடுத்த நேர்மறை நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x