உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் அறிவிப்பு

உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் அறிவிப்பு
Updated on
1 min read

சண்டிகர்: போலீஸார் சுட்டதில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் சிங் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்வர் தெரிவித்து உள்ளார்.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகள் அந்த மாநில எல்லையான கனவுரி நகரில் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய போது ஹரியாணா போலீஸார் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களை கலைத்தனர்.

அப்போது பஞ்சாப்பை சேர்ந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங் என்பவர் உயிரிழந்தார். இதையொட்டி ஹரியாணா போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று அறிவித்துள்ளார். விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஆயுதங்களுடன்... இதனிடையே, டெல்லி சலோ போராட்டத்தில் ஈட்டி, கேடயம் போன்ற ஆயுதங்களுடன் நிஹாங்சீக்கியர்கள் கலந்து கொண்டுள்ளனர். பஞ்சாபைச் சேர்ந்த நிஹாங் சீக்கியர்கள் நேற்று முதல் டெல்லி எல்லையான ஷம்பு பகுதியில் குவியத் தொடங்கினர்.

இந்த வகை சீக்கிய இனத்தவர் போரில் ஈடுபடும் வகையைச் சேர்ந்தவர்கள். 17-ம் நூற்றாண்டிலேயே இவர்கள் வாள், ஈட்டி போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு பல்வேறு போர்களைச் சந்தித்தவர்கள். அந்த வழியில் வந்த நிஹாங் இனத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதுகுறித்து நிஹாங் சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஷேர் சிங் கூறும்போது, “அநீதிக்கும், அடக்குமுறைக்கும் எதிராக போராடுமாறு சீக்கியர்களின் குருவான குரு கோவிந்த் சிங் எங்களுக்கு போதித்துள்ளார். எனவே, நாங்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளோம்’’ என்றார்.

2021-ல் நடைபெற்ற டெல்லி போராட்டத்திலும் நிஹாங் இன சீக்கியர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in