Published : 23 Feb 2024 06:13 AM
Last Updated : 23 Feb 2024 06:13 AM

நீர்மின் நிலைய திட்டத்தில் ரூ.2,200 கோடி ஊழல்: காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உட்பட 30 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: ஊழல் வழக்கு தொடர்பாக காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் வீடு உட்பட 30 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியில் கிரு பகுதியில் ரூ.4,286 கோடி செலவில் நீர் மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இது வரும் 2025-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை சத்யபால் மாலிக் என்பவர் காஷ்மீர் ஆளுநராக பணியாற்றினார். கடந்த 2021-ம்ஆண்டு அக்டோபரில் அவர் கூறும்போது, “கிரு நீர் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தை பெற முன்னணி தனியார் நிறுவனம் ரூ.150 கோடியையும், இதே திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை பெற மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் ரூ.150 கோடியையும் லஞ்சமாக வழங்கமுன்வந்தனர். இரு கோப்புகளையும் நிராகரித்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

இந்த ஊழல் விவகாரம் மற்றும் புல்வாமா தாக்குதல், விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சத்யபால் மாலிக் கருத்துகளை கூறினார்.

இந்நிலையில், கிரு நீர் மின் நிலைய திட்டத்தில் ரூ.2,200 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக சத்யபால் மாலிக் மற்றும் அவரோடு தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், டெல்லி, மும்பை உட்பட 30 இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக சத்யபால் மாலிக் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். ஒரு சர்வாதிகாரியின் உத்தரவின்பேரில் மத்திய புலனாய்வு அமைப்பு எனது வீட்டில் சோதனை நடத்தி உள்ளது. எனது உதவியாளர், ஓட்டுநரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற சோதனைகளுக்குஅஞ்ச மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x