Published : 09 Feb 2018 07:17 AM
Last Updated : 09 Feb 2018 07:17 AM
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியானது (மஜத) பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பாஜக, மஜத உள்ளிட்டவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத கட்சியானது, தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், தேவகவுடா, கடந்த வாரம் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், மஜத - பகுஜன் சமாஜ் கூட்டணி ஏற்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கூட்டணி வெற்றிகரமாக அமைந்திருப்பதை இரு கட்சிகளும் தற்போது உறுதிப்படுத்திவிட்டன. இதுதொடர்பாக, பகுஜன் சமாஜ் சதீஷ் சந்திரா மிஸ்ராவும், மஜதவின் தனிஷ் அலியும் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
கர்நாடகாவில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், மஜதவும் இணைந்து போட்டியிட முடிவெடுத்துள்ளது. உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையின் கீழ் முதன்முறையாக பகுஜன் சமாஜ் கட்சி இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 8 தனித் தொகுதிகளும், 12 பொது தொகுதிகளும் அடங்கும். மீதமுள்ள 204 தொகுதிகளிலும் மஜத போட்டியிடுகிறது. முதல்வர் வேட்பாளராக குமாரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் இணைந்து விரைவில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT