பிரதமர் மோடியின் மனைவி விபத்தில் சிக்கினார்

பிரதமர் மோடியின் மனைவி விபத்தில் சிக்கினார்
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் சென்ற கார் இன்று விபத்தில் சிக்கியது.  இந்த விபத்தில் அவருக்கு  சிறிய அளவில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் குஜராத்தில் உள்ள மேகசனா மாவட்டம், உன்ஜான் நகரில் தனது சகோதரர் அசோக் மோடியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு குஜராத் நோக்கி தனது உறவினர்கள் 7 பேருடன் யசோதோ பென் காரில் சென்று கொண்டிருந்தார்.

கட்டுண்டா நகர் அருகே சித்தோர் நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு லாரியில் மோதியதாகக் கூறப்படுகிறது.  இதில் யசோதா பென்னின் உறவினரான பசந்த் பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கார் ஓட்டுநர் ஜெயேந்திரா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ''இன்று காலை நிகழ்ந்த கார் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் உள்ளார்'' எனத் தெரிவித்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in