Published : 21 Feb 2024 07:41 AM
Last Updated : 21 Feb 2024 07:41 AM

பிஹார் விக்ரமசிலா மகாவிகாரா பல்கலையில் அகழ்வாராய்ச்சி பணி மீண்டும் தொடக்கம்

பாட்னா: பிஹார் மாநிலம் பகல்பூரில் உள்ள விக்ரமசிலா மகாவிகாரா பல்கலையில், 42 ஆண்டுகளுக்குப்பின் அகழ்வாராய்ச்சி பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

பிஹார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் ககல்கான் என்ற இடத்தில் உள்ளது விக்ரமசிலா மகாவிகாரா பல்கலைக்கழகம். இது 8-ம் நூற்றாண்டில், பால வம்ச மன்னர் தர்மபாலாவால் கட்டப்பட்ட புத்தமத மடாலயம் மற்றும் பல்கலைக்கழகம். இந்தியாவில் உள்ள 3 முக்கிய புத்தமத மடலாயங்களில் இதுவும் ஒன்று.100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்மற்றும் சுமார் ஆயிரம் மாணவர்களுடன் இந்த பல்கலைக்கழகம் இயங்கி வந்தது.

இங்கு புத்தமத வேதங்கள், தத்துவம், இலக்கணம், மெய்யியல், இந்திய சாஸ்திரம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. இங்கு பயின்றவர்கள், உலக முழுவதும் புத்த மதத்தை பரப்புவதற்காக சென்றனர். இது 1193-ம் ஆண்டு முகலாயர் ஆட்சி காலத்தில் முகமது பின் பக்தியர் கல்ஜி என்ற மன்னரால் இடிக்கப்பட்டது.

வரலாறு தெரியவரும்: இங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதில் மடாலய கட்டிடம், நூலக கட்டிடம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அழ்வாராய்ச்சி பணிகள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டன. தற்போது இங்கு மீண்டும் ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து பாட்னாவில் உள்ள இந்திய அகழ்வராய்ச்சி துறை நிபுணர் கவுதமி பட்டாச்சார்யா கூறும்போது, ‘‘பகல்பூரில்அகழ்வாராய்ச்சி பணி தொல்பொருள் ஆய்வு நிபுணர் ஜலஜ் குமார் திவாரி மேற்பார்வையில் தொடங்கியுள்ளது. புதிய அகழ்வாராய்ச்சி மூலம் விக்ரமசிலா மகாவிகாரா பல்கலைக்கழகம் பற்றி புதிய தகவல்கள் மற்றும் வரலாறு தெரிவரும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x