Published : 18 Feb 2024 06:20 AM
Last Updated : 18 Feb 2024 06:20 AM

ஜார்க்கண்ட் அமைச்சரவையில் சேர்க்காததால் 12 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அதிருப்தி

ராஞ்சி: ஜார்க்கண்டில் அமைந்துள்ள புதிய அமைச்சரவையில் தங்களைசேர்க்காததால் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருந்த ஜேஎம்எம் மூத்த தலைவர் ஹேமந்த் சோரன் நில முறைகேடு வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, சம்பய் சோரன்புதிய முதல்வராக பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவை நேற்றுமுன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் ஜேஎம்எம் (4) மற்றும் காங்கிரஸ் (4) கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவையில் புதியவர் களை சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்காததால், 12 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகுரை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாநிலத்தின் இளம் வயது காங்கிரஸ் எம்எல்ஏ-வான அம்பா பிரசாத் கூறும்போது, “12 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பாக நாங்கள் வைத்த கோரிக்கை நிலுவையிலேயே உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களிடம் இது குறித்து கேட்டால் அவர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. அவர்கள் அலட்சியமாக உள்ளனர். மேலும் இளம் எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என கட்சியின் மாநில தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால், அதுபற்றி அவர்கள் கண்டுகொள்ளவில்லை” என்றார்.

மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ தீபிகா பாண்டே கூறும்போது, “புதிய அரசில் புதுமுகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை” என் றார்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகுர் கூறும்போது, “எங்கள் எம்எல்ஏ-க்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x