Last Updated : 04 Feb, 2018 09:52 AM

 

Published : 04 Feb 2018 09:52 AM
Last Updated : 04 Feb 2018 09:52 AM

டெல்லி ‘தமிழ்நாடு இல்லம்’ பெயரில் மாற்றம் இல்லை: வளாகங்களுக்கு மட்டும் புதிய பெயரிடப்பட்டுள்ளதாக விளக்கம்

டெல்லியில் உள்ள இரு தமிழ்நாடு இல்லங்களின் பெயரில் மாற்றம் இல்லை. இரு வளாகங்களுக்கு மட்டும் தனித்தனி பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

டெல்லி, சாணக்யபுரியில் எண் 6, கவுடில்யா மார்க் என்ற விலாசத்தில் 1967 முதல் தமிழ்நாடு இல்லம் செயல்பட்டு வருகிறது. அதன் வளாகத்தில் மற்றொரு அடுக்கு மாடி கட்டிடம் 1976-ல் கட்டப்பட்டது. பிறகு தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் கட்டிடமாக இதே பகுதியின் பீர் திக்கந்தர்ஜித் மார்க்-ல் 2004-ல் 5 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் முதல் இரு கட்டிடங்களை ‘பழைய தமிழ்நாடு இல்லம்’ எனவும். புதிய கட்டிடத்தை ‘புதிய தமிழ்நாடு இல்லம்’ என்றும் அழைப்பது வழக்கமானது.

இதில் சற்று பொலிவுடன் உள்ள புதிய இல்லத்தில் தங்குவதற்கே பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் இவ்விரண்டு வளாகங்களுக்கும் புதிதாக பெயர்கள் சூட்டலாமா என டெல்லியின் உள்ளுரை ஆணையர் அலுவலகம் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, பழைய வளாகத்திற்கு ‘வைகை தமிழ் இல்லம்’ எனவும், புதிய வளாகத்துக்கு ‘பொதிகை தமிழ் இல்லம்’ என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது.

இதனால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து ‘தி இந்து’விடம் தமிழ்நாடு இல்ல உள்ளுரை ஆணையர் அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “தமிழ்நாடு இல்லம் எனப்படும் இரு கட்டிடங்களின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை. அந்தக் கட்டிடங்களில் உள்ள ‘தமிழ்நாடு இல்லம்’ என்ற பெயர்ப் பலகையும் மாற்றப்படாது. தமிழக அரசாணையின்படி ‘தமிழ்நாடு இல்லம் பழைய விருந்தினர் மாளிகை’ என்ற வளாகத்தின் பெயர் ‘தமிழ்நாடு இல்லம் வைகை தமிழ் இல்லம்’ எனவும், ‘தமிழ்நாடு இல்லம் கூடுதல் விருந்தினர் மாளிகை’ என்ற வளாகத்தின் பெயர் ‘தமிழ்நாடு இல்லம் பொதிகை தமிழ் இல்லம்’ என்றும் மாற்றப்படுகின்றன. இந்த வளாகங்களை சுட்டிக்காட்டவே புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்றனர்.

மத்திய அரசின் நிலத்தை குத்தகைக்கு பெற்று, தமிழக அரசு இல்லங்கள் கட்டியுள்ளது. இதில் வைகை தமிழ் இல்ல வளாகம் 1.75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1960 முதல் 99 வருட குத்தகையில் பெறப்பட்டுள்ளது. பொதிகை தமிழ் இல்லம் 1.97 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 1992 முதல் 30 வருட குத்தகையில் உள்ளது. இரு குத்தகை காலங்களும் நீட்டிப்புக்கு உரியதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x