நிதிஷ் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம்: ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ காவல் துறையில் புகார்

நிதிஷ் அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.10 கோடி பேரம்: ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ காவல் துறையில் புகார்
Updated on
1 min read

பாட்னா: நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர், அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ சஞ்சீவ் குமார் மீது பிஹார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிதிஷ் குமார், இக்கூட்டணியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிஹார் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில் 129 உறுப்பினர்கள் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தள - பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக வாக்களிக்க தனக்கு ரூ.10 கோடி பேரம் பேசியதாக ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ சுதன்ஷு சேகர் புகார் அளித்துள்ளார். “நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காமல், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும்படி எங்கள் கட்சி எம்எல்ஏ சஞ்சீவ் குமார், எங்கள் கட்சியில் உள்ள மற்ற எம்எல்ஏக்களிடம் பேரம் பேசினார்.

எனக்கு ரூ.10 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசினர். இது தொடர்பாக பொறியாளர் சுனில் என்னை கடந்த 10-ம் தேதி தொடர்புகொண்டார். முதற்கட்டமாக ரூ.5 கோடி தருவதாகவும் வாக்கெடுப்பு முடிந்த பிறகு ரூ.5 கோடி தருவதாகவும் கூறினார். வாக்கெடுப்பில் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் எங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் பிமா பார்தி, மற்றும் திலீப் ராய் இருவரும் கடத்தப்பட்டனர். இந்தக் கடத்தலில் சஞ்ஜீவ் குமார் மற்றும் சுனில் ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது” என்று அவர் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in