

தேர்வு பயத்தை வெல்வது எப்படி என்பது குறித்து மாணவர்களுக்காக வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுக்கிறார்.
இதனை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளும் பிரதமரின் உரையை மாணவர்கள் கேட்பதற்கு வழிவகை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, "பிரதமர் மோடியின் உரை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் நேரலையாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்குச் சென்றடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில் மாணவர்கள் இதை கண்டிப்பாக கேட்டாகவேண்டும் என்ற எவ்வித நிர்பந்தமும் இல்லை" என்றார்.
பிப்ரவரி 16-ம் தேதி காலை 11 மணிக்கு பிரதமர் உரையாற்றவுள்ளார். சுமார் 50 முதல் 55 நிமிடங்கள் வரை பிரதமரின் உரை நீளும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடியின் எக்ஸாம் வாரியர்ஸ் ( Exam Warriors ) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உரை அமைந்திருக்கும். அந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடி தேர்வை எதிர்கொள்வதற்கான 25 உத்திகளைத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.