

புதுடெல்லி: சண்டிகரை சேர்ந்த வயதான தம்பதியினருக்கு கூடுதலாக பணம் செலுத்தி முன்பதிவு செய்த இருக்கையை தர மறுத்த ஏர் இந்தியா நிறுவனம் ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த சுனில் பார்தி மற்றும் அவரது மனைவி குசும். இவர்கள் டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு செல்வதற்காக இரண்டு இருக்கைகளை (41சி மற்றும் 41ஏ) முன்பதிவு செய்துள்ளனர். வயதானவர்கள் என்பதால் கால்நீட்ட வசதியாக உள்ள இந்த இருக்கைக்கு கூடுதலாக ரூ.18,000 அவர்கள் செலுத்தியுள்ளனர். ஜுன் 22, 2022-ல் புறப்படுவதற்காக ஜூன் 6, 2022-ல் முன்பதிவு செய்தனர்.
பயணத்தின்போது அந்த வயதான தம்பதியினருக்கு முன்பதிவு செய்திருந்த இருக்கைகளுக்கு பதிலாக (32இ மற்றும்32டி) இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்து அவர்கள்விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் மிகவும்அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இஷ்டமிருந்தால் விமானத்தில் ஏறுங்கள் இல்லையென்றால் வெளியேறுங்கள் என வயதானவர்களிடம் முரட்டுத்தனமாக பேசியுள்ளனர். அதன்பின்னர்தான் அந்த வயதான தம்பதி முன்பதிவு செய்த இருக்கைகள் விஐபிக்களுக்கு ஒதுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த ஏர் இந்தியா நிறுவனம், அவசர கால வெளியேறும் வழி அருகேயுள்ள இருக்கைகளை முதியவர்களுக்கு ஒதுக்கக்கூடாது என்றவிதிமுறையின் அடிப்படையிலேயே அவர்களுக்கு வேறு இருக்கைகள் வழங்கப்பட்டதாக தெரி வித்தது. இது தொடர்பான வழக்கைவிசாரித்த லோக் அதாலத் தலைவர் எஸ்.கே. சச்தேவா உறுப்பினர்கள் சாக்சி சிங் மற்றும் ரூனம் கவுசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இருக்கை முன்பதிவு விசயத்தில் வயதான தம்பதிகள் தவறுசெய்யவில்லை. அவர்களுக்கு இருக்கை ஒதுக்க விதி இல்லையென்றால் கூடுதலாகரூ.18,000 பிரீமியத் தொகையை ஏர் இந்தியா நிறுவனம் எதன்அடிப்படையில் வசூல் செய்தது.மேலும், அந்த விதிமுறை தொடர்பான எந்த விவரங்களும் இணையத்தில் வெளியிடப்படவில்லை.
பணத்தை வசூலித்த பிறகு இருக்கைகளை சரிபார்த்து வழங்குவது ஏர் இந்தியா நிறுவனத்தின் கடமை.இதில், அப்பாவி பயணிகளிடம் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருந்தும் அவர்கள் 15 மணி நேரம் அசவுகரியமான பயணத்தை அனுபவித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு ஏர் இந்தியாரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளனர்.