

சென்னை: ராணுவம் பயன்படுத்தும் 155 மி.மீ பீரங்கி குண்டுகளின் துல்லியத்தை மேம்படுத்த, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனத்துடன் சென்னை ஐஐடி கூட்டு சேர்ந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் 155 மி.மீ பீரங்கி குண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை பொதுத்துறை நிறுவனமான மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் தயாரித்து வருகிறது. இதற்கிடையே இதன் துல்லியத்தை அதிகரிக்க இந்நிறுவனத்துடன் சென்னை ஐஐடி கூட்டு சேர்ந்துள்ளது.
சேதத்தை அதிகரிக்க இலக்கு: தற்போது இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ள பீரங்கி குண்டுகளின் பிழைஏற்படும் சுற்றளவு 500 மீட்டராக உள்ளது.
இதன் துல்லியத்தை அதிகரித்து பிழை ஏற்படும் சுற்றளவை 10 மீட்டருக்குள் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். தாக்கத்தை ஏற்படுத்தும் மையப் புள்ளியில் சேதத்தை அதிகரிப்பதும் இதன் மற்றொரு முக்கிய இலக்காகும்.
சென்னை ஐஐடி வான்வெளிப் பொறியியல் துறை பேராசிரியர் ஜி.ராஜேஷ் தமது குழுவினருடன் 2 ஆண்டு காலத்தில் துல்லியமான பீரங்கி குண்டுகளை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபட உள்ளார்.
‘தற்சார்பு’ இலக்கு: இதுதொடர்பாக மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரவி காந்த் கூறும்போது, “நாடு‘தற்சார்பு’ இலக்கை அடைவதில் இந்த முயற்சி பெரும்உத்வேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.
உயர்தர வெடிமருந்து தயாரிப்பில் எம்ஐஎல் நிறுவனத்தின் பலமும், ஐஐடி மெட்ராஸ்-சின் திறமையும் இணைந்து, சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன பீரங்கி குண்டுகளை உருவாக்குவது உறுதி” என தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து சென்னை ஐஐடி வான்வெளிபொறியியல் துறை பேராசிரியர் ஜி.ராஜேஷ் கூறும்போது, “இத்திட்டம் மூலம் வெளிநாட்டு அரசுகளின் செயற்கைக்கோள் அமைப்புகள் இன்றி இந்தியா சுதந்திரமாக செயல்பட முடியும்” என்றார்.