

ஹைதராபாத்தில் சாலையில் நடந்து சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நபருக்கு காவலர் ஒருவர் சிபிஆர் எனப்படும் அவசர சிகிச்சையை அளித்து உயிரைக் காப்பாற்றினார்.
சிபிஆர் என்பது, மார்புக்கு அழுத்தங்களைக் கொடுத்து சுவாசத்தை மீட்டெடுக்கும் முறையாகும். இந்த முறையைப் பின்பற்றியே காவலர் அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினார்.
இச்சம்பவம் நேற்று (புதன்கிழமை) நடந்தது.
ஹைதராபாத் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கே.சந்தன் மற்றும் இனாயாதுல்லா கான். இவர்கள் இருவரும் பகதர்புரா காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள். இவர்கள் நேற்று பூரனபுல் தர்வாஜா பகுதியில் பணியில் இருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி தாங்காமல் அவர் சாலையில் சரிந்து விழுந்தார். அந்த நபரைச் சுற்றி மக்கள் குவிந்தனர்.
இதைப் பார்த்த காவலர்கள் கே.சந்தன் மற்றும் இனயத்துல்லா கான் கூட்டத்தை விலக்கிவிட்டு அந்த நபருக்கு உதவினர். இந்த அவசர உதவியால் அவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டார். பின்னர், அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் ஊர்க்காவல் படையினர், கான்ஸ்டபிள்களுக்கு சிபிஆர் எனப்படும் அவசர சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.