Published : 06 Feb 2018 02:32 PM
Last Updated : 06 Feb 2018 02:32 PM
2022க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி பெற முடியும் என நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
இன்று காலை மக்களவைக் கூட்டம் காலை 11 மணிக்கு சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியது. சிலி நாட்டின் பிரதிநிதிக்குழு உறுப்பினர் ஒருவர் இன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்க்கிறார் என்று உறுப்பினர்களுக்கு ஒரு தகவலாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து உலகக் கோப்பையை வென்ற இந்திய யு-19 கிரிக்கெட் அணிக்கு சபாநாயகர் வாழ்த்து தெரிவித்தார்.
கேள்வி பதில்
பின்னர், கேள்வி பதில் பகுதி தொடங்கியது. இதில் மத்திய ஆயுதப்படை போலீஸார் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் பதில் அளித்துள்ளார். அப்போது, காஷ்மீர் பகுதியில் எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். 10 நிமிடங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்த கூட்டத்தில் நக்சல் பாதித்த பகுதிகளில் மேம்பாடு, ஒடிசாவில் ஆதிதிராவிடர்களுக்கான நலத் திட்டங்களுக்கு சரியாக நிதி ஒதுக்கப்படாத நிலை, பிஹார் மாநில தாழ்த்தப்பட்ட முதுநிலை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளில் திடீர் குறைப்பு நடவடிக்கை போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
அனைவருக்கும் வீடுகள்
பின்னர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு கேள்விகளுக்கு மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதிலளித்துப் பேசினார்.
அவர் பேசியபோது, ''ஒவ்வொரு குடிமகனும் பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின்மூலம் 2022க்குள் சொந்தமாக ஒரு வீட்டைப் பெற முடியும். இதற்காக, அரசு நிலங்களைப் பயன்படுத்த இரண்டு வழிமுறைகளும் தனியார் நிலங்களைப் பயன்படுத்துவதற்காக ஆறு வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இன்று வரை 37,45,862 வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், ''ஏழை எளியவர்களுக்கு கடன் வழங்க அனுமதிக்க வங்கிகள் தயங்குகின்றன என்று சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், இதில் எங்கள்துறை அமைச்சகம் பகுதி ஆர்வம் மட்டுமே செலுத்தமுடியும். நீங்கள் கூறிய பிரச்சினை நிதி அமைச்சரிடம் கேட்கப்படவேண்டியது'' என்றார்.
மாநிலங்களவை
இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவைக் கூட்டம் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் தொடங்கியது. அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பெயர்களில் பட்டியலிடப்பட்ட இருக்கையில் வந்து அமர்ந்தனர்.
மாநிலங்களவையைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ், அகாலி தளம் மற்றும் தெலுங்கு தேசக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானங்களை வெங்கய்ய நாயுடு தள்ளுபடி செய்தார். இதனை எம்.பி.க்கள் எதிர்த்தனர். அதைத்தொடர்ந்து அவை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்ப்பு
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தெலுங்கு தேச எம்.பி.க்களும் போராட்டத்தில் ஈடுபட்டபோது | படம் வி.சுதர்சன்
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு வளாகத்தின் வெளியே முன்பே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட பதாகைகளோடு நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஏந்தியிருந்தனர்.
திரிணாமூல் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தின்வெளியே நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கச்சா எண்ணெயை குறைந்த விலையில் இறக்குமதி செய்தாலும், எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் காரணம் என்பதை அவர்கள் கேள்விஎழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT