Published : 07 Feb 2018 06:29 PM
Last Updated : 07 Feb 2018 06:29 PM
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின், நாடுமுழுவதும் 21.54 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, குஜராத் மாநிலங்களில் அதிகஅளவு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் இதுகுறித்து கூறியதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின், நாடுமுழுவதும் 21.54 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான், கள்ள நோட்டுக்களை தயாரித்து இந்தியா முழுவதும் புழக்கத்தில் விடுவதை புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. எனினும் பணமதிப்பு நீக்கத்திற்குப் பின், பாகிஸ்தானில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் வந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, 2,000, 500, 200 ரூபாய் நோட்டுகளிலும் கள்ள நோட்டுகள் வெளி வந்துள்ளன.. அதிகஅளவு கள்ள நோட்டுகள் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இங்கு, 6.96 கோடி ரூபாய் அளவிற்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 5.34 கோடி ரூபாய் அளவிற்கும், உத்தரப் பிரதேசத்தில் 1.41 கோடி ரூபாய் அளவிற்கும் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ எனக்கூறினார்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. கறுப்பு பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT