உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகரில் இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் மோடி: 5 லட்சம் பேர் பங்கேற்பதாக பாஜக தகவல்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகரில் இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் மோடி: 5 லட்சம் பேர் பங்கேற்பதாக பாஜக தகவல்
Updated on
1 min read

புலந்த்சாகர்: மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை உத்தர பிரதேசம் புலந்த்சாகரில் பிரதமர் மோடி இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் எனவும், இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து 3-வதுமுறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கு உத்தர பிரதேசத்தில் இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாராணசி கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ளது. ஆனால், அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை புலந்த்சாகரில் இன்றுதொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட ஒரு சில நாளில் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வர் என பாஜக கூறியுள்ளது.

புலந்த்சாகரில் பிரச்சாரம் ஏன்? உத்தர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 2019-ம்ஆண்டு தேர்தலில் 62 தொகுதிகளில் வென்றது. இதில் இரண்டுஇடங்களில் பாஜக கூட்டணியில் இடம் பெற்ற அப்னா தளம் வென்றது. மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 14 தொகுதிகளில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது, 6 தொகுதிகளில் தோல்வியடைந்தது. மேற்கு உத்தர பிரதேத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், இங்கிருந்து பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in