Published : 22 Aug 2014 03:19 PM
Last Updated : 22 Aug 2014 03:19 PM

இந்திரா காந்தி படுகொலை குறித்த பஞ்சாபி படத்துக்கு தடை

'கவும் தே ஹீரே' (சமுதாயத்தின் வைரங்கள்) என்ற பஞ்சாபி திரைப்படம், இந்திரா காந்தியை கொன்றவர்களை போற்றும் விதமாக இருப்பதால் அத்திரைப்படத்திற்கு தடை விதிப்பதாக தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை தொடர்பாக தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பஞ்சாபி படம், இன்று (வெள்ளிக்கிழமை) திரையிடப்படுவதாக இருந்தது.

ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பஞ்சாபி படத்தை மறு ஆய்வு செய்யப்போவதாகவும், அதன் காரணமாக அந்த படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய செய்தி, மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதித்து தணிக்கை வாரியத்தலைவர் லீலா சாம்சன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

தணிக்கைத் துறை விளக்கம்:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்ததை சித்தரிக்கும் விதமாக இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் கொலையாளிகள் இருவரும் போற்றப்படுகின்றனர். இது இந்திரா காந்தியின் படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக உள்ளது. இந்த படம் வெளியானால், பஞ்சாப் மாநிலத்தில் அமைதி சீர்குலையலாம் என்பதை கருத்தில் கொண்டு இந்த படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என தணிக்கைத் துறை விளக்கமளித்துள்ளது.

தடை கோரி மனு:

1984-ம் ஆண்டு பஞ்சாபில் பிரிவினை கோரி போராடிய தீவிரவாதிகள், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பதுங்கியிருந்தனர். அவர்களை வெளியேற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ராணுவ நடவடிக்கை எடுத்தார். இதனால், ஆத்திரமடைந்த இந்திராவின் சீக்கிய மெய்க்காப்பாளர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.

இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர்களை போற்றும் விதமாக ‘கவும் தே ஹீரே’ என்ற பஞ்சாபி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 22) வெளியாவதாக இருந்தது. படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு அளித்தனர்.

தணிக்கை துறையில் லஞ்சம்:

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் குமார், திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றார் என்ற புகாரின் பேரில் கடந்த திங்கள்கிழமை மும்பையில் கைது செய்யப்பட்டார்.

‘கவும் தே ஹீரே’ படத்தின் தயாரிப்பாளரும், ராகேஷ் குமாருக்கு லஞ்சம் கொடுத்து தணிக்கைச் சான்றிதழை பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

லஞ்சம் கொடுத்து அந்த படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்தும் விசாரிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை மறு பரிசீலனை செய்யும்படி தணிக்கை வாரியத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x