Published : 14 Feb 2018 08:10 AM
Last Updated : 14 Feb 2018 08:10 AM

ஆதார் எண் இல்லை என்பதற்காக அரசு நலத்திட்ட உதவிகளை மறுக்க கூடாது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்

ஆதார் எண் இல்லை என்பதற்காக ஒருவருக்கு அரசு திட்ட உதவிகளை மறுப்பது கூடாது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

டெல்லியில் நேற்று மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கிடைப்பதற்கான வழிமுறை அரசு மேற்கொண்டு வருகிறது. நல்ல நிர்வாகத்தைத் தரும் நோக்கில் ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும், அனைவருக்கும் சென்றடைய ஆதார் உதவுகிறது. அதே நேரத்தில் ஆதார் எண் இல்லை என்பதற்காக ஒருவருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மறுக்கக்கூடாது.

ஆதார் எண்ணைப் பெறுமாறு அவருக்கு அறிவுரைகளை வழங்கவேண்டும். மேலும் அந்த நலத்திட்ட உதவிகள் அவருக்கு கிடைக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

ஆதார் எண் இல்லையென்பதற்காக நியாய விலைக் கடைகளில் பொருட்கள் மறுக்கப்படுகிறது. இது இனிமேல் நடக்கக்கூடாது. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்களை மறுக்ககூடாது. சில இடங்களில் வயதானவர்களின் விரல் ரேகைகள் ஒத்துப் போவதில்லை. அதனால் அவர்களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படுவதில்லை என்று புகார் வருகிறது. இனி இதுபோன்ற புகார்கள் வரக்கூடாது. அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களைச் சென்று சேர்வதை உறுதி செய்வயேண்டும்.

வாகன உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. பொதுமக்களுக்கு சேவையை வழங்க, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மாநில அரசுகள் பயன்படுத்தவேண்டும். பிபிஓ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பிபிஓ-க்களை இதற்காக பயன்படுத்தலாம்.

அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி அமெரிக்க டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை நாடு எட்டும். இதன்மூலம் 50 லட்சம் முதல் 75 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x