Published : 26 Feb 2018 07:53 PM
Last Updated : 26 Feb 2018 07:53 PM
மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் மீதான பாலியல் புகார் குறித்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு தெரியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த வி.சண்முகநாதன் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் நியமனம் செய்யப்பட்டார். திருமணம் ஆகாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 40 ஆண்டுகள் தீவிரமாக இருந்ததால், இவர் நியமிக்கப்பட்டார். அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநரின் பணிகளையும் இவர் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் மான்புக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் சண்முகநாதன் செயல்படுகிறார், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் எனக் கூறி மாளிகையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கடந்த ஆண்டு புகார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் , அப்போது குடியரசு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் கடிதம் அனுப்பினர். அந்த கடிதத்தில் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 100 பேர் வரை கையெழுத்திட்டு இருந்தனர்.
இந்த கடிதத்தின் நகல் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகை, மத்திய உள்துறை அமைச்சர், முதல்வர் முகுல் சங்மா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், ஆளுநர் மாளிகையின் மாண்புக்கு களங்கம் தரும் வகையில் ஆளுநர் சண்முகநாதன் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையை இளம்பெண்களின் விடுதி போல மாற்றிவிட்டார்.
இளம்பெண்கள் தமது விருப்பம் போல் வந்து தங்கவும் அல்லது திரும்பவும் ஏற்ற இடமாக ஆளுநர் மாளிகை மாற்றப்பட்டுவிட்டது. தடையின்றி அவரின் படுக்கை அறைக்கு ள்அவர்கள் நேரடியாக வந்து செல்கிறார்கள். ஆளுநரின் இல்லத்தின் பாதுகாப்பும் விட்டுக்கொடுக்கப்படுகிறது. அவருடைய உதவிக்காக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்களாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனது ஆளுநர் பதவியை வி.சண்முகநாதன் ராஜினாமா செய்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய அரசுக்கும், குடியரசு தலைவருக்கும் புகார் அனுப்பி ஒரு ஆண்டாகியும் எந்த நடவடிக்கையும் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் மீது இல்லை. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஊடகத்தினர் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அது குறித்து பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், “ மேகாலய முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் மீதான பாலியல் புகார் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT