Published : 21 Jan 2024 06:59 PM
Last Updated : 21 Jan 2024 06:59 PM

“அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பேன்” - நித்யானந்தா ட்வீட்டால் சர்ச்சை

நித்யானந்தா

புதுடெல்லி: அயோத்தி நகரில் நாளை ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா அறிவித்துள்ளது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலகம், விளையாட்டு துறை பிரபலங்கள், வெளிநாட்டு தலைவர்கள் என 11,000 விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், நித்யானந்தா தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த வரலாற்று மற்றும் அசாதாரண நிகழ்வைத் தவறவிடாதீர்கள். அயோத்தி கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இது உலகம் முழுவதையும் அலங்கரிக்கும் ஓர் நிகழ்வாகும். முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து மதத்தின் உயர் மத தலைவர் (Supreme Pontiff of Hinduism) (நித்தியானந்தாவை அவரது ஆதரவாளர்கள் இவ்வாறு அழைப்பார்கள் எனக் கூறப்படுகிறது) பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்யானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அவரே கூறி வருவது குறிப்பிடத்தக்கது. அத்துடன், பாலியல் வன்கொடுமை வழக்கில், 2010-ம் ஆண்டு அவரது ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நித்யானந்தாவை போலீஸார் கைதுசெய்தனர். அதன்பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x