ஆதார் இனி பிறந்த தேதிக்கான ஆதாரம் ஆகாது: பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிவிப்பு

ஆதார் இனி பிறந்த தேதிக்கான ஆதாரம் ஆகாது: பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஆதார் அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படாது என பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜனவரி 16-ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) உத்தரவைத் தொடர்ந்து, பிறந்த தேதிக்கான அடையாளமாக இனி ஆதார் அட்டை ஏற்கப்படாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.

மேலும், பிறந்த தேதியில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஆவணங்களின் பட்டியலில் இருந்தும் ஆதார் நீக்கப்படுவதாக இபிஎஃப்ஓ அறிவித்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2023 டிசம்பர் 22 அன்றுவெளியிட்ட சுற்றறிக்கையில், “அங்கீகாரத்துக்கு உட்பட்டு ஒரு தனிநபரின் அடையாளத்தை அறிந்து கொள்வதற்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம். ஆனால், பிறந்த தேதிக்கான ஆதாரமாக அதனை கருதமுடியாது” என்று கூறியிருந்தது.

பல உயர் நீதிமன்றங்கள் தங்களது உத்தரவுகளில் ஆதார் பிறந்த தேதிக்கான உறுதியான மற்றும் சரியான ஆதாரம் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ளதை அந்த சுற்றறிக்கையில் யுஐடிஏஐ சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ், அரசுஅல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல், பான் அட்டை போன்ற பல்வேறு ஆவணங்கள் பிறந்த தேதிக்கான சரியான ஆவணமாக தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in