மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.படம்: பிடிஐ
மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி.படம்: பிடிஐ

2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

Published on

புதுடெல்லி: வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் கடந்த ஆண்டு நவ.15-ம் தேதி 'வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை' தொடங்கப்பட்டது. இதன் படி நாடு முழுவதும் சிறப்பு வாகனங்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் 'வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை' முகாம்கள் மூலம் பலன் அடைந்த பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக 'வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை' நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 4 கோடி பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. சுமார் 50 லட்சம் பேருக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் புதிதாக 33 லட்சம் பேர் இணைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 25 லட்சம் விவசாயிகளுக்கு கிஷன் கடன் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 22 லட்சம் பேர் இலவச சமையல் காஸ் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர். சுமார் 10 லட்சம் சாலையோர வியாபாரிகள்கடன் உதவி கோரி விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படைத்தன்மை, நேர்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. இதன்காரணமாக கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுவதும் 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

திருநங்கைகள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடியின கிராமங்களில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.

வேளாண் பணியில் ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பாக பெண்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 15,000 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடூப்பூசி போடப்பட்டிருக்கிறது. 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த லட்சியத்தை நோக்கி அதிவேகமாக முன்னேறி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நீங்கள்தான் மோடி: மேகாலயாவை சேர்ந்த ரி போய் என்ற பெண்ணுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். சுயஉதவிக் குழு மூலம் வங்கிக் கடன் பெற்ற அந்த பெண் தற்போது சொந்த கிராமத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அதோடு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “உங்களைப் போன்றவர்களால் எனது பணி எளிதாகிறது. உங்கள் கிராமத்தில் நீங்கள்தான் மோடி. உங்களை மோடியாக பாவித்து மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.

மத்திய அரசு திட்டங்கள் மக்களை சென்றடைவதற்காக `வளர்ந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை' நடத்தப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in