Published : 17 Jan 2024 09:25 AM
Last Updated : 17 Jan 2024 09:25 AM

“தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்” - எம்ஜிஆர் பிறந்தநாளில் பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி: தமிழக முன்னாள் முதல்வர், அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “எம் ஜிஆரின் பிறந்தநாளான இன்று நாம் அவருடைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து கொண்டாடுவோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளம். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவருடைய திரைப்படங்கள் சமூக நீதியையும், பிறர் துன்பத்தைக் கண்டு விலகாமல் துணை நிற்கும் உணர்வுக்ளையும் கடத்தின. அதனால், அவர் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றெடுத்தார். ஒரு தலைவராக, முதல்வராக அவர் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தார். தமிழகத்தின் வளர்ச்சியில், மேம்பாட்டில் நீங்காத தடம் பதித்தவர். அவருடைய பணிகள் இன்றளவும் நம்மை ஊக்குவிக்கக் கூடியவை” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலபிட்டியில் 1917 ஜன.17-ம் தேதி பிறந்தார். தொடக்கத்தில் அவர் காந்தியவாதியாக இருந்தாலும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் தன்னை 1953-ல் இணைத்துக் கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய எம்ஜிஆர், பின்னாளில் அதிமுக கட்சியை தொடங்கினார்.

கடந்த 1977-ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார்.

சத்துணவு உள்ளிட்ட திட்டங்கள்.. முதல்வராக இருந்தபோது நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார். சத்துணவு திட்டம், 5-ம் உலகத் தமிழ் மாநாடு, பள்ளிமாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவசவேட்டி - சேலை வழங்கும் திட்டம்உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x