ஆந்திராவின் லெபாக்‌ஷி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

ஆந்திராவின் லெபாக்‌ஷி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
Updated on
1 min read

லெபாக்‌ஷி: ஆந்திரப் பிரதேசத்தின் லெபாக்‌ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா, வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதை முன்னிட்டு, கடந்த 11-ம் தேதி முதல் விசேஷ விரதத்தை கடைப்பிடித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள லெபாக்‌ஷி வீரபத்ர சுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர் கோயிலில் அமர்ந்து தெலுங்கில் எழுதப்பட்ட ரங்கநாத ராமாயணத்தின் சில பாடல்களை பக்தர்கள் பாட கேட்டார்.

லெபாக்‌ஷியின் சிறப்பு: ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது அதனை பார்த்த பறவையான ஜடாயு, அவரை மீட்கும் முயற்சியில் பலத்த காயமடைந்தது. சீதையைத் தேடி ராமர் அந்த வழியாக வந்தபோது அவரிடம் சீதையை ராவணன் கடத்திச் சென்றதை ஜடாயு கூறி பின்னர் உயிர்விட்டது. இதனையடுத்து, ராமரால் ஜடாயு மோட்சம் பெறுகிறது. ஜடாயு மோட்சம் பெற்ற இடமே லெபாக்‌ஷி என கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இடத்தில் கட்டப்பட்ட பழம்பெறும் கோயிலான வீரபத்ர சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

கேரளாவுக்குப் பயணம்: ஆந்திரப் பிரதேச பயணத்தை முடித்துக்கொண்டு கேரளா செல்லும் பிரதமர் மோடி, அங்கு குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கும், திரிபிராயர் ராமசாமி கோயிலுக்கும் சென்று வழிபடுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in