“குளிர்காலத்தில் குல்மார்க் இப்படி வறண்டு பார்த்ததில்லை” - புகைப்படம் பகிர்ந்து ஓமர் அப்துல்லா வருத்தம்

“குளிர்காலத்தில் குல்மார்க் இப்படி வறண்டு பார்த்ததில்லை” - புகைப்படம் பகிர்ந்து ஓமர் அப்துல்லா வருத்தம்
Updated on
1 min read

புதுடெல்லி:ஜம்மு காஷ்மீரின் பிரபலமான சுற்றுலாதலமான குல்மார்க் குளிர்காலத்தில் இவ்வளவு வறண்டு தான் பார்த்தில்லை என்று ஓமர் அப்துல்லா வேதனைத் தெரிவித்துள்ளார். பனியில்லாமல் இருக்கும் குல்மார்க் படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் ஒமரின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து தேசிய மாநாட்டுகட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குளிர்காலத்தில் குல்மார்க் இவ்வளவு வறண்டு நான் பார்த்ததில்லை. அதற்காக முந்தைய ஆண்டு எடுத்த இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளேன். இவை இரண்டும் ஜன.6 ஆம் தேதிகளில் எடுக்கப்பட்டவை. விரைவில் பனி பொழியவில்லை என்றால் கோடைகாலம் மிகவும் சிரமமாக இருக்கும். என்னைப் போன்ற பனிச்சறுக்கு வீரர்கள் சரிவுகளில் சறுக்கி விளையாட இனியும் காத்திருக்க முடியது என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஆனால் சறுக்குவதற்கு இங்கே எதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

பனி போர்த்திய சரிவுகளுடன் இருக்கும் குல்மார்க் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பனிச்சறுக்கு வீரர்களை ஈர்க்கும் மிகவும் பிரபலமான ஒரு சுற்றுலாதலமாகும். இந்த சீசனில் அங்கு இன்னும் பனிபொழிவு ஏற்படாமல் இருப்பது இந்தியாவில் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் பற்றிய கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதனிடையே ஜன.8ம் தேதி செய்தி நிறுவனம் ஒன்று எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் நகரம் வறண்டு தரிசு நிலம் போல காணப்பட்டது. சின்ன சின்ன திட்டுகளாக ஆங்காங்கே மட்டும் பனி இருந்தது. குல்மார்க் மட்டும் இல்லாமல் காஷ்மீரின் பாகல்கம் மலை மாநிலங்கலான இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட்டிலும் சராசரி அளவை விட குறைவாகவே பனிப்பொழிவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in