Published : 05 Jan 2018 05:01 PM
Last Updated : 05 Jan 2018 05:01 PM

கால்நடைத்தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு தண்டனை அறிவிப்பது மீண்டும் ஒத்திவைப்பு

 கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் அறிவிப்பது சனிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கால்நடைத் தீவன ஊழலில் லாலு மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாஸ்பாஸா கருவூல மோசடியில் 2013-ம் ஆண்டில் அவருக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர் மீதான 2-வது கால்நடைத் தீவன வழக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் அவர் குற்றவாளி என்று கடந்த 23-ம் தேதி நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார்.

அவருக்கான தண்டனை விவரம் நேற்று முன்தினம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அன்றைய தினம் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தின் வழக்கறிஞர் பிருந்தேஸ்வரி பிரசாத் காலமானதால் தண்டனை விவர அறிவிப்பு ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று தண்டனை விவரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது நீதிபதி சிவபால் சிங் கூறுகையில், ''லாலுவின் ஆதரவாளர்கள் பலர் தொலைபேசியில் பேசினர். நான் சட்டத்தை மட்டுமே பின்பற்றுவேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், லாலு இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை. வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்ற நடைமுறை தொடங்கியது. லாலு உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்திய நீதிபதி தண்டனை அறிவிப்பது நாளை தொடரும் என அறிவித்தார்.

முன்னதாக, இரண்டாவது கால்நடைத் தீவன வழக்கில் லாலுவுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கக் கோரி அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x