Published : 08 Jan 2018 01:50 PM
Last Updated : 08 Jan 2018 01:50 PM

குறைவான செலவில் கப்பல் மூலம் ஹஜ் பயணம்: இந்தியா திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல்

குறைந்த பயண செலவில், கப்பல் மூலம் ஹஜ் பயணிகளை அனுப்பும் இந்தியாவின் திட்டத்திற்கு சவுதி அரேபியா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

இந்தியா - சவுதி அரேபியா இடையே ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது.

பின்னர் இதுகுறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளதாவது:

''இந்தியாவில் இருந்து கடல் வழியாக கப்பலில் ஹஜ் பயணிகளை அனுப்பும் திட்டத்திற்கு சவுதி அரேபியா கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள், ஏற்பாடுகள் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேசி முடிவு செய்வார்கள். வரும் ஆண்டுகளில் கடல் வழி ஹஜ் பயணம் சாத்தியமாகும்.

கப்பல் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்வதால், பயண செலவு வெகுவாக குறையும். இதன் மூலம் ஏழை, எளிய இஸ்லாமிய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும். ஆண்கள் துணையின்றி பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், நான்கு அல்லது ஐந்து பேர் ஒரு குழுவாக ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 1,300 பெண்கள் தனியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் வழக்கமான குலுக்கல் முறை அல்லாமல் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு தனியாக தங்குமிடம், போக்குவரத்து போன்றவை ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்காக பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்'' எனக் கூறினார்.

மும்பையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு கப்பல் மூலம் ஹஜ் பயணம் செய்ய வசதியாக முன்பு கப்பல் இயக்கப்பட்டு வந்தது. எனினும் 1995-ம் ஆண்டிற்கு பின் இது நிறுத்திக் கொள்ளப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x