Published : 05 Jan 2018 01:12 PM
Last Updated : 05 Jan 2018 01:12 PM
முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதன் மூலம் காங்கிரஸ் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த்குமார் வெள்ளிக்கிழமை அன்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''முஸ்லிம் சகோதரிகளுக்கு நீதி நிலைநாட்டப்படுவது குறித்து அவர்கள் (காங்கிரஸ்) யோசிக்கவில்லை. ஷா-பனோ வழக்கைக் கையாண்டது போல இதிலும் அநீதியை இழைக்கின்றனர்.
முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப தினந்தோறும் அவர்கள் புதிய புதிய காரணங்களைக் கொண்டு வருகின்றனர்.
வரலாற்றில் இருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல முத்தலாக் மசோதாவை அமல்படுத்த அனுமதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்சினை?
முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது மனைவியை உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் (முத்தலாக்) முறையை தடை செய்ய வகை செய்கிறது. இதை மீறும் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் மசோதா வகை செய்கிறது.
இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அப்போது, நன்கு பரிசீலித்து தேவையான மாற்றங்கள் செய்ய ஏதுவாக மசோதாவை மாநிலங்களவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தக் கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது மசோதாவுக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து அமளி நிலவியதால் மாநிலங்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் லாபம் கிடைக்கக் கூடாது என கருதும் பாஜக அரசு, இந்த மசோதாவை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளது. அதேநேரம் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது.
இதனிடையே குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT