Published : 07 Jul 2014 12:58 PM
Last Updated : 07 Jul 2014 12:58 PM

விலைவாசி உயர்வு பிரச்சினை: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு





விலைவாசி உயர்வு பிரச்சினையை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

16-வது மக்களவையின் முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்குத் தொடங்கியது. இதில், ஆந்திர மாநிலம் கெயில் எரிவாயுக் குழாய் விபத்து மற்றும் சென்னை - மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.



இதைத் தொடர்ந்து, கேள்வி நேரம் தொடங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கடும் அமளியில் ஈடுபட்டனர். ரயில் கட்டணம், பெட்ரோல் - டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், அவை மீண்டும் தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் விலை அதிகரிப்பு பிரச்சினையை முன்வைத்து மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் மிகவும் பாதித்தது. இதன் தொடர்ச்சியாக, மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக, சபாநாயகர் மித்ரா மகாஜன் அறிவித்தார்.

இதையடுத்து, உணவு இடைவேளைக்குப் பின் அவை கூடியதும், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வு பிரச்சினையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். வாக்கெடுப்பில்லாத விவாதம் நடத்த அனுமதிப்பதாக சபாநாயகர் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால், இன்றைய அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், நாளை (செவ்வாய்க்கிழமை) ரயில்வே பட்ஜெட், நாளை மறுநாள் (புதன்கிழமை) பொருளாதார ஆய்வறிக்கை, வியாழக்கிழமை பொது பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன.

இதைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம், மத்திய அமைச்சர் நிகில் சந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் ஆகியவை குறித்தும் மத்திய அரசிடம் கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.

இந்த நிலையில், முதல் நாளிலேயே விலைவாசி உயர்வு பிரச்சினையை முன்வைத்து, நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கும் வகையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டிருப்பது கவனிக்கத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x