Published : 31 Jan 2018 08:07 AM
Last Updated : 31 Jan 2018 08:07 AM

திருப்பதியில் வெடிபொருள் கண்டெடுப்பு: போலீஸார் தீவிர விசாரணை

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வெடிகுண்டு தயாரிப்புக்கான எலக்ட்ரானிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரண்டு பாதைகளின் வழியாக மலையேறிச் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வீதம், இவ்வழிகளில் செல்வோருக்கு ‘திவ்ய தரிசன’ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த வழிகளில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பல நேரங்களில் முக்கியப் பிரமுகர்களும் வருவதுண்டு.

இந்நிலையில், ஸ்ரீவாரி மெட்டு வனப்பகுதியில் திருப்பதி அதிரடிப் படையினர் நேற்று முன் தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு புதரில் கேட்பாரற்ற நிலையில் பை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பையை சோதனையிட்டதில், அதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும், திருப்பதி அதிரடிப்படை ஐ.ஜி. காந்தாராவ் அங்கு உடனடியாக வந்து கண்டெடுக்கப்பட்ட எலக்ட்ரானிக் பொருள்களை பார்வையிட்டார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வெடிகுண்டு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை மர்மநபர்கள் இங்கு மறைத்து வைத்துள்ளனர். அந்தப் பையில், திருச்சியில் உள்ள ஒரு முகவரி உள்ளது. இவை அனைத்தையும், திருமலை போலீஸாரிடம் ஒப்படைப்போம். அவர்கள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள்” என்றார்.

முன்னதாக, கடந்த 2003-ம் ஆண்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலைக்கு காரில் சென்றபோது, அலிபிரி மலை அடிவாராத்தில் குண்டு வெடித்தது. இதில், சந்திரபாபு நாயுடு உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில், இதே சேஷாசலம் வனப்பகுதியில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x