Published : 23 Jan 2018 06:50 PM
Last Updated : 23 Jan 2018 06:50 PM

ஹாதியாவின் திருமணம் பற்றி விசாரிக்க கூடாது: என்.ஐ.ஏ.வுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

 

ஹாதியா வழக்கில் வேறு எந்த அம்சங்களையும் விசாரிக்க தடையில்லை, ஆனால், ஹாதியா, ஷாபின் ஜஹானை திருமணம் செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தக் கூடாது என்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் அகிலா(வயது24). இவர் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இது குறித்து போலீசில் அசோகன் புகார் செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆட்கொண்ர்வு மனுவையும் தாக்கல் செய்தார்.

சேலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வந்த அகிலாவை சிலர் கடத்திச் சென்று இருப்பதாவும் அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகிய அகிலா தான் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மதம் மாறியதாகவும், தனது பெயரை ஹாதியா என மாற்றிக்கொண்டுவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், தான் தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணைக்கு மீண்டும் ஆஜராகிய ஹாதியா,  ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் இந்த திருமணத்தை ஏற்க மறுத்தது, பதிவை ரத்து செய்ய உத்தரவிட்டது. அதேசமயம், ஹாதியாவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனுக்களை எதிர்த்து ஹாதியாவின் கணவர் ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 24 வயதான ஹதியா தனது கணவரை சுயமாகத் தேர்வு செய்ய அ ரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ந்தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஹதியா பெற்றோரின் வசம் இருக்கத் தேவையில்லை, கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இந்நிலையில், ஹாதியாவின் கணவர் ஷபின் ஜஹான் பின்னணி குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருப்பதாக என்.ஐ.ஏ. உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் முன் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான அரசு சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், “ ஹதியா மதம் மாற்றப்பட்டு இருக்கிறார், அவர் மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கிறார். அவரை தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கவே அவருக்கு திருமணம் நடந்துள்ளது” என வாதிட்டார்.

ஹதியாவின் கணவர் ஜஹான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் அமர்வு என்.ஐ.ஏ.வுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

அதில், கூறியிருப்பதாவது, “ ஹாதியா குறித்து எந்த அம்சங்களையும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தலாம். ஆனால், ஹாதியாவின் திருமணத்தை பற்றியோ அவர் ஜஹானை திருமணம் செய்தது குறித்தோ விசாரணை நடத்தக் கூடாது.

ஹாதியா நல்லவரை திருமணம் செய்துள்ளாரா? அல்லது கெட்டவரை திருமணம் செய்துள்ளரா? என்பதை பற்றி விசாரணை செல்லக்கூடாது. அது குறித்து ஹாதியாவுக்கு தெரியும். நீதிமன்றம் கூட அது குறித்து கேள்வி எழுப்பம் உரிமை இல்லை.

திருமணத்தையும், நம்முடைய வாழ்க்கை துணையையும் எந்தவிதமான குற்றச் சதியில் இருந்தும், குற்ற நடவடிக்கைகளில் இருந்தும் பிரித்து வைத்து இருக்க வேண்டும்.

தேசிய புலனாய்வு அமைப்பு ஜஹானை விசாரணை செய்ய அனுமதிக்கிறோம். ஆனால், அவரிடம் திருமணத்தை பற்றி விசாரணை நடத்தக் கூடாது. திருமணம் குறித்து ஹாதியா மட்டுமே கேள்வி கேட்க உரிமை உண்டு” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 22ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x