Published : 05 Jan 2018 10:26 AM
Last Updated : 05 Jan 2018 10:26 AM
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்துவரும் வேளையில், அதனை முறையாக பரிசோதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அண்மைக்காலமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் புகார் கூறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையருக்கு மாநில தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், “மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, தேர்தல் நடத்தும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் இந்த இயந்திரங்களில் தவறுகளும், குளறுபடிகளும் நடப்பதாக அண்மைக்காலமாக அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்தலின் மீது நம்பிக்கையை அதிகரித்தாலும், இத்தகைய வி.வி.பேட் இயந்திரங்களிலும் சிக்கல் எழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர்களிடையே எழுந்துள்ள சந்தேகத்தை போக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும்.
எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த இயந்திரங்களில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? என்பதை பரிசோதிக்க பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த கர்நாடக அரசு தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT