Published : 19 Jan 2018 09:13 PM
Last Updated : 19 Jan 2018 09:13 PM
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் வேளாண்மை, அடிப்படைக் கட்டமைப்புக்கு முன்னுரிமை தரும் வகையில் இருக்கும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
கவுண்ட் டவுன்
மத்திய பட்ஜெட்டுக்கான 'கவுண்ட் டவுன்' நிகழ்ச்சி மும்பையில் இன்று நடந்தது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:
உயர்வு
பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவை நாட்டின் சூழலை மாற்றிவிட்டன. மத்திய அரசின் நேரடி வருவாய் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 18 சதவீதம் உயர்ந்துள்ளது. அரசு கடன் பெறும் தொகையையும், ரூ.30 ஆயிரம் கோடிக்குள் குறைத்து, நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்துள்ளது.
இரட்டை இலக்க வளர்ச்சி
கடந்த காலாண்டு மீண்டும் 7 சதவீதம் வளர்ச்சியை தொட்டு இருக்கிறோம். இப்போது நம்முடைய இலக்கு இரட்டை இலக்க வளர்ச்சியாகும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும். ஆனால், பொருளாதாரம் வளர்ச்சி செல்லும் வேகம், நிச்சயம் இலக்கை அடைவோம் என நம்புகிறேன்.
முன்னுரிமை
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை, வேளாண்மை, அடிப்படை கட்டமைப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து நிதி அமைச்சர் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறேன்.
நம் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதைப் பார்த்து, நம்மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் நம் நாட்டில் முதலீடு செய்து வருகின்றனர்.
40 கி.மீ. சாலை
ரூ. 8 லட்சம் கோடி முதலீட்டில் செய்யப்பட்டுவரும் சாலை, கப்பல், துறைமுகம், உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து ஆகிய திட்டங்கள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடியும்.
சாலை திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடும் செய்யும் தொகை ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து இந்த நிதியாண்டில் ரூ.1.30 லட்சம் கோடியாக அதிகரித்தோம். இதைஅடுத்த நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.
நாள் ஒன்றுக்கு 28 கி.மீ. சாலை சராசரியாக அமைக்கப்பட்டு வருகிறது, இது அடுத்த ஆண்டு 40 கி.மீ. என்ற அளவில் உயர்த்தப்படும்.''
இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT