Published : 15 Jul 2014 08:58 AM
Last Updated : 15 Jul 2014 08:58 AM

கடந்த கால தவறுகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்படும்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி

கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து மக்களவை அதிமுக கட்சித் தலைவர் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலின் போது ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு கூறினார்.

மக்களவையில் தம்பிதுரை திங்கள்கிழமை பேசும்போது, “சட்டவிரோதமாக 360 தொலைபேசி இணைப்புகள் பெற்றது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரித்து வரும் வழக்கின் நிலை என்ன? இந்த தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சன் டிவியின் நெட்வொர்க் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் செயல்படுகிறது. எனவே, அந்த மாநிலங்களிலும் விசாரணை நடைபெறுமா?” என்றார்.

அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறும்போது, “இது தொடர்பான விவரங்களை விரைவில் சேகரித்து அவையில் அளிக்கிறேன். அலுவலக அதிகாரிகள் நிலையில் நடத்தப் பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து பின்னர் அவையில் தெரிவிக்கிறேன்” என்றார்.

அதன் பின்பு, “இந்த வழக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளில் முடியும்” என்று தம்பி துரை மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, “கடந்த காலங்களில் நடந்த தவறுகள் அனைத்தையும் விசாரிப்பதில் எங்கள் அரசு முனைப்பு காட்டும்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், குற்றவாளிகள் யாரையும் அரசு தப்ப விடாது” என்றார் ரவிசங்கர் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x