Published : 01 Dec 2023 06:03 AM
Last Updated : 01 Dec 2023 06:03 AM

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும் புதிய விடியலும்

பிரதமர் நரேந்திர மோடி

கடந்த ஆண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபோது, உலக அளவில் பல்வேறு சவால்கள் நிலவின. இந்தச் சூழலில் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தன்மையில் இருந்து மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தத்துவத்திற்கு மாறுவதற்கான ஒரு மாற்று உத்தியை வழங்க முயன்றுள்ளது. இதற்கு பன்முகத்தன்மையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை என்பதை நாம் அறிந்து செயல்படுகிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, லட்சியத்துடன் கூடிய செயல்பாடுகள், செயல் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான நடைமுறைகள் எனஇந்த 4 அம்சங்கள் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ அணுகுமுறையை வரையறுக்கும் முக்கியஅம்சங்களாகத் திகழ்ந்தன. ஜி20தலைவர்களின் டெல்லி தீர்மானம் உறுப்பு நாடுகளால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 55 ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ஆப்பிரிக்க யூனியன்,ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி20, உலகின் 80% மக்கள் தொகையை உள்ளடக்கிய நாடுகளின் அமைப்பாக விரிவடைந்துள்ளது.

உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ‘உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்’ என்ற உச்சிமாநாட்டை இந்தியா இரண்டு கட்டங்களாக நடத்தியது. வளரும் நாடுகளின் கவலைகள் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜி20தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2030-ம் ஆண்டை மையமாகக் கொண்ட முக்கியமான ஜி20 2030-ம் ஆண்டு செயல்திட்டத்தை இந்தியா வகுத்து அளித்துள்ளது. இதில் சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட, ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சிக்கல்களுக்கு செயல் சார்ந்த அணுகுமுறையை இந்தியா எடுத்துரைத்துள்ளது.

ஜி20 பிரகடனம்

ஜி20 பிரகடனத்தின் ‘பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம்' பசியை எதிர்த்துப் போராடுவதிலும், பூமியைப் பாதுகாப்பதிலும் உள்ள சவால்களை எதிர்கொள்ள வழிகாட்டுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஜி20 பிரகடனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பிரகடனம் பருவநிலை நீதி மற்றும் சமத்துவத்திற்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மக்களையும், பூமியையும் மையமாகக் கொண்ட, அமைதிமற்றும் வளத்திற்கான கூட்டு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் ஜி20 தலைமைத்துவத்தை பிரேசிலிடம் இந்தியா ஒப்படைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x