Published : 28 Jan 2018 07:30 AM
Last Updated : 28 Jan 2018 07:30 AM
கண்காணிப்பு கேமரா வசதிகளுடன் பெங்களூருவில் நவீன நடமாடும் இந்திரா உணவகங்களை கர்நாடக மாநில அரசு தொடங்கியுள்ளது.
இந்த வகை உணவகங்களை குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். பசியில்லாத கர்நாடக மாநிலம் என்ற இலக்கை அடையும் நோக்கில் இந்த உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் இந்த உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 18 நடமாடும் உணவகங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சித்தராமையா கூறும்போது, “கர்நாடகாவில் அனைவருக்கும் சுகாதாரமான உணவு குறைவான விலையில் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்திரா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன’’ என்றார்.
இந்த வகை உணவகங்களை பெங்களூரு மாநகராட்சி பராமரிக்கிறது. பெங்களூரு மாநகர ஆணையர் என்.மஞ்சுநாத் பிரசாத் கூறும்போது, “இந்திரா நடமாடும் உணவகங்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டன. மருத்துவமனை, பஸ், ரயில் நிலையங்கள் அருகே உணவகங்கள் நிறுத்தப்பட்டு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்படுகிறது. இங்கு ரூ.5-க்கு சிற்றுண்டியும், ரூ.10-க்கு மதிய, இரவு உணவுகளும் வழங்கப்படுகின்றன. உணவகங்களில் சாப்பிடும் ஒருவருக்காக அரசு ரூ.32-ஐ மானியமாக வழங்குகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT