சத்தீஸ்கரில் 14 வாகனங்கள், இயந்திரங்கள் தீவைத்து எரிப்பு: மாவோயிஸ்ட் அட்டூழியம்

சத்தீஸ்கரில் 14 வாகனங்கள், இயந்திரங்கள் தீவைத்து எரிப்பு: மாவோயிஸ்ட் அட்டூழியம்
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 14 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தீவைத்து எரித்தனர்.

சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டம், பன்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள், பன்சி காவல் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தற்காலிக முகாமில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நேற்று அதிகாலையில் இங்கிருந்த வாகனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலின் பேரில் போலீஸார் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் 5 லாரிகள், 4 பிக்-அப் வாகனங்கள், ஒரு ஜேசிபி, ஒரு கிரேன், 2 தண்ணீர் லாரிகள், ஒரு கலவை இயந்திரம் ஆகியவை தீயில் கருகியதாக போலீஸார் தெரிவித்தனர்.

தீவைப்பு சம்பவத்தில், முகாமில் இருந்த யாரும் காயம் அடையவில்லை. தப்பியோடிய மாவோயிஸ்ட்களை போலீஸார் தேடி வருகின்றனர். சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புடன் நடந்து முடிந்த நிலையில் இந்தசம்பவம் நடைபெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in