Published : 05 Jul 2014 11:13 AM
Last Updated : 05 Jul 2014 11:13 AM

மதுரை பல்கலை. துணைவேந்தர் பதவி நீக்க உத்தரவுக்கு தடை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பதவி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

முன்னதாக கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கல்யாணி மதிவாணன் இணைப் பேராசிரியராக மட்டுமே பதவி வகித்துள்ளார். பேராசிரியர் பதவி வகித்தது இல்லை. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவுப்படி, துணை வேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியராக இருந்திருக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கல்யாணி மதிவாணன் பதவி நியமன உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கல்யாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் முகோபாத்யாயா, ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

யுஜிசி, தமிழக அரசு, பல்கலைக்கழகம் சார்பில் நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x