நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் மரியாதை

நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் மரியாதை
Updated on
1 min read

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாளான நேற்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சக்தி ஸ்தல்லில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில்அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முதல் பெண்பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இந்திரா காந்தி.இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்பதில் மன உறுதியுடன் செயல்பட்டவர். அவரின் தைரியம் லட்சக்கணக்கான இந்தியர்களை எப்போதும் ஊக்குவிக்கும்.

திறமையான தலைமைத்துவத்துடன் செயலாற்றிய அவர் நாட்டிற்காக அனைத்தையும் தியாகம் செய்தவர். அப்படிப்பட்ட தன்னலமில்லா தலைவரின் பிறந்தநாளில் எங்களின் பணிவான மரியாதையை செலுத்துகிறோம். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளிட்டுள்ள பதிவில், “நாட்டின் நலனுக்கு உறுதியான முடிவுகளையும், வலிமையான ஆளுமையின் உருவகமாகவும் விளங்கிய இரும்புப் பெண்மணி இந்திரா காந்தி" என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்தவர். மூன்றாவது பிரதமராக 1966 முதல் 1977 வரையிலும், மீண்டும் 1980 முதல் அக்டோபர் 31, 1984-ல்படுகொலை செய்யப்படும் வரையிலும் பிரதமர் பதவியை வகித்தவர் இந்திரா.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். இந்திரா காந்திக்குப் பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியை ஏற்றார். மொத்தம் 15 ஆண்டு 350 நாட்கள் பிரதமர் பொறுப்பு வகித்து, அவரது தந்தை நேருவுக்குப் பிறகுஅதிக காலம் பிரதமர் பதவியை வகித்த 2-வது பிரதமர் என்ற பெருமைக்குரியவர் இந்திரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in