Published : 29 Jan 2018 12:23 PM
Last Updated : 29 Jan 2018 12:23 PM
ஐதராபாத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை தமன்னா மீது பட்டதாரி இளைஞர் ஷூ வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தமன்னா. இவர் நடித்த, பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் புகழை ஈட்டிக் கொடுத்தன.
இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஹிமாயத்நகரில் தனியார் நகைக்கடையின் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த கடையை திறந்து வைப்பதற்காக நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
கடையில் திறப்பு விழாவுக்கு தமன்னா வந்தபோது, கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞர் தமன்னா மீது தான் வைத்து இருந்த ஷூ வை வீசினார். மாறாக தமன்னாவுக்கு அருகே இருந்த கடையின் ஊழியர் மீது அந்த ஷூ விழுந்தது. இதையடுத்து, அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து நாராயண்குடா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி ரவிந்தர் நிருபர்களிடம் கூறுகையில் “ நடிகை தமன்னா மீது ஷூ வீச முயன்ற இளைஞரை கைது செய்து இருக்கிறோம். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் பெயர் கரிமுல்லா, ஒரு கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார் என்பதும், முஷீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அந்த ஷூ தமன்னா மீது படவில்லை, அருகே இருந்த ஊழியர் மீதுதான் விழுந்துள்ளது. சமீப காலமாக தமன்னா நடித்த திரைப்படங்களில் அவரின் கதாபாத்திரம் சரியில்லை என்பதால் ஷூ வீசியதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
கடையின் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT