

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்குவந்தால், காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை முடக்கிவிடும் என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் தாராநகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் பழைய ஓய்வூதியம்,சுகாதார காப்பீடு, மானிய விலைசிலிண்டர் உள்ளிட்ட திட்டங்களைநிறுத்தி விடும். அத்துடன் கோடீஸ்வர தொழிலதிபர்களுக்குத்தான் பாஜக உதவி செய்யும்.
குறிப்பாக, வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்கும் அதானிக்கு பாஜக உதவி செய்யும். ஆனால், காங்கிரஸ் அரசோ விவசாயிகளின் பாக்கெட்டில் பணத்தைப் போடும்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வர்த்தகர்கள் பயனடைவார்கள். குறிப்பாக, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். அதானியின் அரசு வேண்டுமா அல்லது விவசாயிகள், தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தும் அரசு வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.